February 26th, 2009

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.
எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.
கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஆரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.
சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.
ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.
எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!
Tags: writer sujatha
Posted in remembering | 1 Comment »
February 24th, 2009
பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடிவைத்துவிட்டுப் போய்விட்டார்.
மாமி நடுராத்திரியில் எழுந்து துணி தோய்ப்பாள்…அதுவும் தோய்க்கிற கல்லைக் கணவன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து ’ஸ்…ஸ்’ என்று பி.ஜி.எம் கொடுத்துக் கொண்டு. இது ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி ‘என்’ ப்ளாக்கில் களீக் ஒருத்தரின் மாமனார் வீடு வாடகைக்கு வந்தது – அதற்கு மாறினோம். ’உன்னைப் போல் ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை’ என்று கண்ணால் தண்ணீர்விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.
- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2002.
Posted in remembering | 2 Comments »
February 23rd, 2009
அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் –
‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல,
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
‘வார்முலைகள்’, ‘தமிழன்னை’ எதுவும் இன்றி
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்ட முடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பினீரேல்,
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகின்றேன்.’
- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2000.
Posted in remembering | No Comments »
February 17th, 2009
அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…
அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம்.
மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…
அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள்.
அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.
- எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.
Posted in remembering | No Comments »
February 15th, 2009
”குட்மார்னிங் ஸார்!”
மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.
பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.
மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.
வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.
- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.
Posted in remembering | No Comments »
February 12th, 2009
பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).
உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.
சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…
டில்லி மாறவில்லை.
- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974
Posted in remembering | No Comments »
February 11th, 2009

’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.
- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969
Posted in remembering | No Comments »
July 26th, 2008
Posted in Pics | 11 Comments »
February 28th, 2008
இங்கு தான் அனைத்துமே
போவதென்ப தெவ்விடம்
உமது நல்ல சீடருள்
அவர்கள் புனையும் கதைகளுள்
பல்கி வாழ வாழ்த்துவேன்
அந்தம் அறு ரங்கராஜனை !!
Read / Share Memories on Writer Sujatha
Posted in Condolence | No Comments »